January 6, 2020

ஊழ்

ஊழ்

ஆகுஊழால் தோன்றும் அசைவுஇன்மை கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி.           371

கைப் பொருள் உண்டாகும் ஊழினால் முயற்சி தோன்றும். கைப் பொருள் குறையும் ஊழினால் சோம்பல் தோன்றும்.

பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.         372

கைப்பொருளைக் கெடுக்கும் ஊழ் அறியாமையை உண்டாக்கும். கைப் பொருளை ஆக்கும் ஊழ் பொருந்திய விடத்து அறிவை அகலப்படுத்தும்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.          373

ஒருவன் நுட்பமான பல நூல்களைக் கற்றாலும், பின்பும் தனது இயற்கை அறிவே மேற்படும்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.     374

உலகத்தின் இயல்பு இரு கூறாக உள்ளது. செல்வமுடையவர் ஆதலும் வேறு, அறிவுடையவர் ஆதலும் வேறு.

நல்லவை எல்லாம்அம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.         375

செல்வந் தேடுங்கால், ஒருவனுக்கு முன்பு நல்லனவாய் இருந்தன வெல்லாம் தீயனவாகும். ஆகூழானால், முன்பு தீயனவாய் இருந்தனவெல்லாம் நல்லனவாம்

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.         376

தமக்கு உரிமையல்லாதவை வருந்தித் தேடினும் ஆகாவாம். தமக்கு உரிமை உடையவை வெளியில் கொண்டு போய்க் கொட்டி னும் போகாவாம்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.  377

கோடியளவு நுகரப்படும் பொருள்களைச் சேர்த்து வைத்தவர் களுக்கும், அப்பொருள்களை உண்டாக்கியவர்களது வகைப்படி யல்லாமல் வேறு வகையினால் நுகர்தல் முடியாது.

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின். 378

தமக்கு வருந் துன்பங்கள் வராமல் போகுமானால், வறுமையால் நுகரப்படும் பொருளில்லாதவர் துறப்பார்.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்.            379

நல்லவை உண்டாகும் போது அவற்றை நல்லவை என்று துய்த்து இன்புறுகின்றவர்கள், தீயவை உண்டாகும்போது துன்பப்படுவது எதற்காக?

ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சூழினும் தான்முந் துறும்.        380

ஊழை நீக்க வேறொன்றை ஆராய்ந்தாலும் அவ்வூழ் முன்னே வந்து நிற்கும். ஆதலால், ஊழை விட மிக்க வலியுடையவை எவை யுள்ளன? ஒன்றுமில்லை.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...