January 6, 2020

புலால் மறுத்தல்

புலால் மறுத்தல்

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.        251

தனது உடம்பை வளர்த்தற்குத் தான் வேறோர் உயிரின் உடம்பை உண்பவன், அருளை எவ்வாறு ஆள்வான்?

பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு. 252

பொருளை ஆளுதல் அதனைக் காவாதாருக்கு இல்லை. அவ்வாறே ஊன் தின்பவர்க்கு அருளை ஆளுதல் இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது  ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். 253

கொலைக் கருவியைக் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யுங் கொலையையே நோக்குவதல்லது, அருளை நோக்காதவாறு போல, வேறொருயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ் வூனையே நோக்குவதல்லது அருளை நோக்காது

அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்
பொருள்அல்லது அவ்வூன் தினல்.  254

அருள் யாதெனின் கொல்லாமை. அருள் அல்லது யாதெனின் கொல்லுதல். ஆதலால், கொல்லுதலால் வரும் அவ்வூனைத் தின்பது அறமன்று.  

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.    255

சில உயிர் இன்னும் உடம்பின்கண் நிலைபெற்றிருத்தல் ஊனுண்ணாமை என்னும் அறத்தினால் உள்ளது. அவ்வறத்தைக் கெடுத்து ஒருவன் ஊனுண்பானாயின் அவனை விழுங்கிய அளறு பின் உமிழ்தற்கு வாயை திறவாது.

தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.            256

தின்னுவதற்காக உலகத்தார் வாங்காராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்அது உணர்வாரப் பெறின்.           257

ஊன் வேறோர் உடம்பின் புண்ணாகும். இந்த உண்மையை உணர்வாராயின் அவ்வூனை உண்ணாதிருக்க வேண்டும்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.            258

குற்றத்தினின்று நீங்கிய அறிவினையுடையர், உயிரினின்று நீங்கிய உடம்பை உண்ணார்

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.            259

நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி செய்தலினும், ஒன்றன் உயிரைப் போக்கி, அதன் ஊனை யுண்ணாமை நல்லது.  

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.       260

ஓருயிரையும் கொல்லாதவனாகிப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.  

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...